அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்ற இளைஞர் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த 31 வயதான சார்லி கிர்க், மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவரால் கழுத்தில் சுடப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் துயர செய்தியை டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார். தனது இரங்கல் பதிவில், "அமெரிக்க இளைஞர்களின் மனதை கிர்க்கை விட வேறு யாரும் புரிந்துகொண்டதில்லை. அவர் அனைவராலும் விரும்பப்பட்டார். இப்போது அவர் நம்மிடையே இல்லை" என்று உருக்கமான வார்த்தைகளைப் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. சுட்டு கொல்லப்பட்ட கிர்க்கிற்கு மனைவி எரிக்கா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.