உக்ரைனுக்கு எதிரான போரை இன்னும் 50 நாட்களில் நிறுத்தாவிட்டால், ரஷ்யாவுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"50 நாட்களுக்குள் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும். இல்லையென்றால், நாங்கள் 100% வரியை ரஷ்யா மீது விதிப்போம்" என்று நேற்று மாலை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் தெரிவித்தார்.
புடின் நடத்தும் போர் போக்கு தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், சண்டை நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும் ரஷ்யாவின் தொடர் தாக்குதல் போரை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
"புடின் அமைதியை விரும்புவதாக கூறிவிட்டு அடுத்த நாளே தாக்குதல் நடத்துகிறார்" என்றும், ரஷ்யா மீது 100 சதவீத வரிகள் மற்றும் புதிய தடைகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபரின் எச்சரிக்கைக்கு ரஷ்யா எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்றும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதில் ரஷ்யா தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, அமெரிக்க அதிபரின் எச்சரிக்கையை புடின் கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்பட்டு வருகிறது.