பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த திடீர் பாராட்டு, உலக அரங்கிலும், குறிப்பாக பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், வர்த்தகத்திலும் பாகிஸ்தான் கொண்டுள்ள ஈடுபாட்டை அமெரிக்கா பெரிதும் பாராட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “கனிமங்கள், ஹைட்ரோ கார்பன் போன்ற துறைகளில் இரு நாடுகளின் புதிய ஒத்துழைப்பின் மூலம் ஒரு வளமான எதிர்காலத்தை உருவாக்க அமெரிக்கா எதிர்நோக்கி உள்ளது” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்தக் கருத்து, பாகிஸ்தானை பயங்கரவாதத்தை ஒழிக்க உண்மையிலேயே முயற்சி செய்வதாக அங்கீகரிப்பதாக எடுத்துக் கொள்ளலாமா அல்லது இது அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராஜதந்திர வியூகத்தின் ஒரு பகுதியா என பல விவாதங்கள் எழுந்துள்ளன.