Publish Date: Thu, 22 Sep 2022 (12:05 IST)
Updated Date: Thu, 22 Sep 2022 (12:09 IST)
ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் 200க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா பகுதியில் உள்ள நீர்சறுக்கு விளையாடும் கடற்கரை பகுதியில் நேற்று முதலாக திமிங்கலங்கள் பல கரை ஒதுங்கி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைலட் திமிங்கலங்கள் எனப்படும் இந்த வகை திமிங்கலங்கள் 230 கரை ஒதுங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் 35 திமிங்கலங்கள் கடல் அலைகளின் எல்லையை தாண்டி கடற்கரையில் உள்ள நிலையில், தன்னார்வலர்கள் பலர் அவற்றின் மீது நீரை ஊற்றி குளிர்வித்தும், துணிகளை வைத்து மூடியும் பாதுகாத்து வருகின்றனர். அவற்றை மீண்டும் கடலுக்குள் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக மெக்குவாரி துறைமுகம் அருகே இதுபோல 500 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதும், அவற்றில் 300 திமிங்கலங்கள் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.