Publish Date: Mon, 02 Jan 2023 (09:27 IST)
Updated Date: Mon, 02 Jan 2023 (09:29 IST)
ஆண்டு முழுவதும் வடகொரியா பல்வேறு ஏவுகணைகளை சோதித்து வரும் நிலையில் அணு ஆயுதத்தை மேலும் அதிகரிக்குமாறு அதிபர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.
அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பானை அச்சுறுத்தும் விதமாக, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. புத்தாண்டின் முதல் நாளான நேற்று வடகொரியா மேற்கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையில் அந்த ஏவுகணை தென்கொரியா, ஜப்பான் இடையே கடல்பகுதியில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
ஆனால் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளில் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், வடகொரியாவை தனிமைப்படுத்துவதில் சில நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகவும், அதனால் தற்போதைய சூழலில் வடகொரியாவின் ஆயுத பலத்தை அதிகரிக்க அணுஆயுத உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
ஏற்கனவே வடகொரியாவின் செயல்பாடுகள் உலகளாவிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கிம் ஜாங் அன் அணு ஆயுதங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.