இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, முதல்முறையாக பொதுவெளியில் பேசினார். அவரது பேச்சு இப்போது சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
கடந்த ஜூன் 13-ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஈரான் போர், 12 நாட்கள் நீண்ட நிலையில், ஜூன் 24-ஆம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். போர் தொடங்கியதிலிருந்து தலைமறைவாக இருந்த ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, இன்று அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளி பதிவில் தோன்றினார். அதில், இஸ்ரேலுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றதாக அதிரடியாக அறிவித்தார்.
தனது உரையில், "ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது!" என்று கமேனி குறிப்பிட்டார். கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களை குறிப்பிட்டே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய கமேனி, "இந்த போரில் அமெரிக்காவுக்கு எந்தவித லாபமும் இல்லை. இஸ்லாமிய குடியரசு மட்டுமே வென்றுள்ளது. அவர்களது தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் ஓர் அறை விழுந்துள்ளது" என்றார். இந்தப் போரில் இஸ்ரேல் முழுமையாக அழிக்கப்படும் என்பதை உணர்ந்ததால்தான் அமெரிக்கா தலையிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார். அவரது பேச்சால் மத்திய கிழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.