ஈரான் மீது அமெரிக்க நடத்திய தாக்குதலில் அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தொடங்கி நடந்து வரும் நிலையில், ஈரான் தொடர்ந்து தனது பாலிஸ்டிக் உள்ளிட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி தாக்கி வருகிறது. இந்நிலையில் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவோ பயன்படுத்தவோ கூடாது என கூறி வந்த அமெரிக்கா, தனது வான் படையை ஏவி ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்ளிட்ட 3 முக்கிய அணுசக்தி தளங்களை தாக்கி அழித்ததாக செய்திகள் வெளியானது.
ஆனால் இந்த 3 அணுசக்தி தளங்களும் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்றும், அவற்றை சரிசெய்ய ஈரானுக்கு சில மாதங்களே ஆகும் என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக சிஎன்என், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த செய்தியை ட்ரம்ப் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுகுறித்து ட்ரூத் தளத்தில் பதிவிட்ட அவர் “பொய் செய்தி சிஎன்என்னுடன் நியூயார்க் டைம்ஸும் இணைந்து மிகவும் வெற்றிகரமான ஒரு ராணுவ தாக்குதலை குறைத்து மதிப்பிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. பொய் செய்தி பரப்பும் இந்த ஊடகங்களை மக்கள் வெறுக்கிறார்கள்” என பேசியுள்ளார்.