முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவிற்காக பாஜக கர்நாடக ஐடிவிங் பிரிவு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் எஸ். மனோகர் இந்த புகாரை பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவு பாஜக கர்நாடகாவின் அதிகாரப்பூர்வ X பக்கமான @BJP4Karnataka பக்கத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
அந்தப் பதிவில், "இந்திரா இந்தியாவுக்கு சமமல்ல, இந்திரா = ஹிட்லர்" என்று குறிப்பிடப்பட்டிருந்ததுடன், 38 விநாடிகள் ஓடும் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. இந்தப் பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ, இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி காலத்தை பற்றியது. வீடியோவில் இருந்த கிராபிக்ஸ் காட்சிகள், இந்திரா காந்திக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் இருந்ததாக புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு அவமரியாதையானது மட்டுமல்லாமல், பல்வேறு மத மற்றும் சமூக குழுக்களிடையே வெறுப்பை உருவாக்கும் நோக்கில் இருந்ததாகவும் FIR கூறுகிறது.
பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர், கோரியுள்ளார். ஹை கிரவுண்ட்ஸ் காவல் நிலைய போலீஸார் FIR பதிவு செய்து மேல் விசாரணை தொடங்கிவிட்டனர். காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாட்டு மக்கள் அறிய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.