இஸ்ரேலுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி, நேற்று தெஹ்ரானில் நடந்த ஒரு மத சடங்கில் பங்கேற்க மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார்.
இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போரில், ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் அணுசக்தி வல்லுநர்கள் பலர் கொல்லப்பட்டனர். போரின் ஆரம்ப நாட்களில் காமெனி ஒரு பாதுகாப்பான இடத்தில் மறைந்திருந்ததாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர் பொதுவெளியில் தோன்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஈரானின் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகளில், காமெனி ஒரு மண்டபத்திற்குள் நுழையும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த மண்டபத்தில், ஷியா முஸ்லிம் நாட்காட்டியின் மிக முக்கியமான நாளான அஷுராவை குறிக்கும் வகையில் ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. இந்த கூட்டத்தில் காமெனி கலந்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.