ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளபதி மொஹ்சென் ரெசாய், இஸ்ரேல் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கும் என ஈரானிடம் உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், இந்த கூற்றை மறுத்து, அப்படி எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஜூன் 13 அன்று இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்திய பிறகும், பாகிஸ்தான் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுடன் மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.
ஈரான் மீதான தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. அதேநேரம், இஸ்ரேலிய விமானங்கள் ஈரானுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் தனது ஈரானிய எல்லையை மூடியது.
பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்றும், இல்லையெனில் ஈரான் மற்றும் பாலஸ்தீனத்தின் கதியை சந்திக்கும் என்றும் தேசிய சட்டமன்றத்தில் பேசினார். இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடுகள் உறவுகளை துண்டிக்கவும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டு வியூகம் அமைக்க கூட்டத்தைக் கூட்டவும் அவர் வலியுறுத்தினார். இஸ்லாமாபாத் தெஹ்ரானுடன் துணை நிற்கும் என்றும் ஆசிப் உறுதிப்படுத்தினார்.