இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப் உயிருக்கு ஆபத்து இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ்க்கு ஆதரவான ஈரானின் செயல்பாட்டையும், அணு ஆயுத உற்பத்தியையும் இஸ்ரேல் கடுமையாக எதிர்த்து வந்த நிலையில் சமீபத்தில் ஈரானின் ஆணு ஆயுத ஆய்வு தளங்கள் மீது குண்டு வீசி தாக்கியது. இதில் ஈரான் ராணுவ தளபதி, அணு விஞ்ஞானிகள் உள்பட பலர் பலியானதாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இஸ்ரேலின் ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்கள் மீது வீசி தாக்கியது. அதற்கு பதிலடியாக நேற்று டெஹ்ரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்கியுள்ளது.
இதற்கிடையே செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத முயற்சிகளுக்கு அமெரிக்கா தடையாக இருப்பதால், ட்ரம்ப் ஈரானின் முக்கிய இலக்காக இருக்கிறார். ஈரானால் உலகிற்கு ஏற்படும் அணு ஆயுத ஆபத்தை ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என பேசியுள்ளார்.
முன்னதாக ஈரான் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தியபோதே, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். தற்போதைய ஈரானின் போர் அமெரிக்கா வரை விரிவதற்கான வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை சந்தேகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K