ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்காக அவசர உதவி எண்களை மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் அவசர எண்களான 98 9128109115 மற்றும் 98 9128109109 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். அத்துடன், ஈரானில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறும் வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இஸ்ரேல், ஈரானின் முக்கிய அணு ஆயுதத் தளங்கள், ஏவுகணை உற்பத்தி ஆலைகள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, ஈரானும் இஸ்ரேலின் பல பகுதிகள் மீது நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
"எங்களுக்கு எதிரான அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குதல் தொடரும்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருப்பது, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.