அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆந்திராவை சோ்ந்த 23 வயதான இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ராஜ்யலட்சுமி யார்லகடா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தில்பட்டம் பெற்றவர்.
நவம்பர் 7, அன்று அதிகாலையில் ராஜி யார்லகடா படுக்கையில் இருந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவருக்கு கடுமையான இருமல் மற்றும் நெஞ்சுவலி இருந்ததாக அவரது உறவினர் சைதன்யா தெரிவித்துள்ளார். அலாரம் அடித்தும் அவர் எழாததை கண்ட அவரது நண்பர்கள், அவர் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதை கண்டறிந்துள்ளனர்.
கர்மேசேடு கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ராஜி, தனது பெற்றோரின் எதிர்காலத்திற்காக அமெரிக்காவுக்கு கல்வி கற்க வந்தார். அவரது திடீர் மரணம் குடும்பத்தை மனதளவில் மட்டுமன்றி, நிதி ரீதியாகவும் பாதித்துள்ளது.
அவரது மரணத்திற்கான சரியான காரணம் குறித்து அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.