பசியால் உணவுக்காக காத்திருந்த காசா பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசா மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ஐ.நா. வழங்கி வந்த நிலையில், இஸ்ரேல் அதற்கு தடை விதித்தது. தற்போது மருந்துகளை மட்டுமே ஐ.நா. இஸ்ரேல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வழங்கி வருகிறது.
இந்த நிலையில், காசா பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் வாடிக்கொண்டிருக்கின்றனர். உணவு மையங்களை நோக்கி செல்லும் மக்களையும் இஸ்ரேல் ராணுவம் ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஈரான்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வகையில், காசாவில் உணவுக்காகக் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்கியதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்த இடத்திலிருந்து பலரும் தப்பித்து ஓடியபோது ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பலரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.