Publish Date: Sun, 12 Apr 2020 (08:59 IST)
Updated Date: Sun, 12 Apr 2020 (09:00 IST)
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து உட்பட அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் மட்டும் கொரோனாவால் 78,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் 9000க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது. இதனையடுத்து இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்தே வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு அரசை நடத்தி வந்தார். ஆனால் அவர் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கே மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும், நடைப்பயிற்சி மேற்கொண்டதாகவும் அவரது செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.