Publish Date: Fri, 04 May 2018 (08:21 IST)
Updated Date: Fri, 04 May 2018 (08:23 IST)
தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது குறித்து நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
மருத்துவ கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான நீட் தேர்வு வரும் 6ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள ஒருசில மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதன்படி நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது
நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளி மாநில மையங்களில்தான் எழுத வேண்டும் என்று கூறியதோடு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டிஜிட்டல் இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே? அதற்கு ஆவன செய்யட்டும் அரசும் ஆணையும் எனக் கூறியுள்ளார்.