Publish Date: Wed, 02 May 2018 (09:58 IST)
Updated Date: Wed, 02 May 2018 (10:01 IST)
கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, மருத்துவ சீட் கிடைக்காத விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் இன்னும் நான்கு நாட்களில் நீட் தேர்வு எழுதவுள்ள நெல்லை மாணவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையை சேர்ந்த தினேஷ் என்ற மாணவரின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் அவருடைய குடும்பம் வறுமையில் வாடியது மட்டுமின்றி வீட்டில் நிம்மதி இல்லாத நிலை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவர் தினேஷ் தனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த கோரி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக்கொண்டார். மேலும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
தினேஷ் தனது கடிதத்தில் எனது மரணத்திற்குக் பின்னராவது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் இல்லையென்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.