Publish Date: Mon, 30 Apr 2018 (18:28 IST)
Updated Date: Mon, 30 Apr 2018 (18:33 IST)
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க சந்தானம் தலைமையிலான குழுவிற்கு மேலும் 2 வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதன்பின்னர் இந்த வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வந்தனர்.
இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு துணைபோன பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்தனர். அதேபோல், இதில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார் எனவே, நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சந்தான தலைமையிலான விசாரணை குழுவிற்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் வழங்கியுள்ளார்.