Publish Date: Mon, 24 Sep 2018 (08:30 IST)
Updated Date: Mon, 24 Sep 2018 (08:32 IST)
ஒரு சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்றால் சபாநாயகரிடம் காவல்துறை அனுமதி வாங்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளது. என்னுடைய கைதுக்கு முன் சபாநாயகரிடன் காவல்துறை அனுமதி பெற்றதா? என்பது தெரியவில்லை என கருணாஸ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
புலிப்படை கட்சி சார்பில் சென்னையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய கருணாஸ், முதலமைச்சர் மற்றும் காவல்துறையினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை கருணாஸ் கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, ''என்னை கைது செய்யும் முன் சபாநாயகரிடம் காவல்துறை அனுமதி பெற்றார்களா? என்று தெரியவில்லை. எனது சமுதாய இளைஞர்களுக்கு நான் கூறிய கருத்துக்களை தவறாக நினைத்து என்னை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இந்த அரசு பேச்சுரிமையை நசுக்கும் வகையில் என்னை போன்றவர்களை கைது செய்து வருகிறது. நான் சட்டத்தை மதிப்பவன். இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்' என்று கூறினார்.
கைது செய்யப்பட்ட கருணாஸை வரும் அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்