Publish Date: Mon, 27 Aug 2018 (22:22 IST)
Updated Date: Tue, 28 Aug 2018 (11:37 IST)
அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்ததாக கூறப்பட்டாலும் இன்னும் இரு அணிகளுக்கு இடையே புகைந்து கொண்டிருப்பதாகத்தான் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திடீரென துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களையும், அமைச்சர் வேலுமணியையும் சந்தித்து பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் நாளை மதுசூதனன் அவர்கள் முதலமைச்சர் பழனிச்சாமியை சந்திக்கவிருப்பதாகவும், அந்த சமயம் தான் அதிமுகவில் இருந்து விலகும் முடிவை முதல்வரிடம் தெரிவிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த மீனவ கூட்டுறவு சங்க தேர்தலில் அமைச்சர் ஜெயகுமார் மற்றும் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற பிரச்சனைதான் மதுசூதனனின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. நாளை மதுசூதனன் முதலமைச்சரை சந்தித்த பின் அவர் என்ன முடிவை எடுக்க போகிறார் என்பதை அறிய அதிமுக தொண்டர்கள் த்ரில்லுடன் காத்திருக்கின்றனர்.