Publish Date: Thu, 26 Apr 2018 (08:53 IST)
Updated Date: Thu, 26 Apr 2018 (08:57 IST)
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் - சந்தானம் குழுவினருக்கும் விசாரணையில் முரண்பாடு ஏற்படாது என தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பேராசிரியை விஷயத்தில் சந்தானம் குழுவினருக்கும் - சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கும் விசாரணையில் முரண்பாடு ஏற்படுமா என தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் சி.பி.சி.ஐ.டி. வழக்கு என்பது அதிலுள்ள கிரிமினல் நடவடிக்கை பற்றியது. ஆனால் சந்தானம் குழுவின் விசாரணை பல்கலைக்கழகம் தொடர்புடையது. எனவே விசாரணை ஒன்றை ஒன்று முரண்படுத்தும் வகையில் இருக்காது என தெரிவித்தார்.