Publish Date: Mon, 23 Apr 2018 (12:32 IST)
Updated Date: Mon, 23 Apr 2018 (12:35 IST)
ஆர்வ கோளாறு காரணமாக ஊடகங்களில் கருத்துகள் கூறுவதை நிறுத்துங்கள் என பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 9 வயது சிறுமி, கூட்டு பாலியல் பலாதகாரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதேபோல், உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்.ல்.ஏ உள்ளிட்ட 5 பேரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படார். இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
ஆனால், இந்த சம்பவங்களை ஆதரிப்பது போல், பாஜகவினர் கூறிய கருத்துகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் கூறிய கருத்துகளும் சமீபத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து பாஜகவினர் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துகளையே கூறி வருகின்றனர் என்கிற எண்ணம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று நமோ செயலி மூலமாக வீடியோ காணொளியில் பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ரினார். அப்போது “தொடர்ச்சியான தவறுகள் மூலம் நான் ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறோம். சமூக விஞ்ஞானி போல் நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள் ஊடகங்களில் பெரிதாக்கப்பட்டு விடுகிறது. இது ஊடகங்களின் தவறல்ல. அவர்கள் அவர்களின் வேலையை செய்கிறார்கள். ஆரவக்கோளாறில், அர்த்தமற்ற கருத்துகளை கூறுவதை நீங்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என அவர் அறிவுரை கூறியுள்ளார்.