Publish Date: Fri, 29 Jun 2018 (07:19 IST)
Updated Date: Fri, 29 Jun 2018 (07:20 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ளது. அவர் முதல்வராக இருந்தபோதும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் இந்த பங்களாவுக்கு அடிக்கடி வந்து ஓய்வு எடுப்பார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் இந்த பங்களா பெரும்பாலும் பூட்டியே உள்ளது. காவலர்கள் மட்டும் இருப்பார்கள்
இந்த நிலையில் நேற்று பங்களாவின் வளாகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பங்களாவை சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் இருந்த புல் காய்ந்து அதில் தீப்பற்றியுள்ளதாக தெரிகிறது. தீவிபத்தின்போது காற்று வேகமாக அடித்ததால் இந்த தீ மளமளவென் பல ஏக்கர்களில் பரவியது
இதுகுறித்து தகவல் அறிந்து சிறுசேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து, தீயை அணைக்கும் பணியிலும் தீ மேலும் பரவி காட்டுத்தீயாக மாறாத வகையிலும் நடவடிக்கை எடுத்தனர். மேலும் முதல்கட்டமாக இந்த தீ, சிறுதாவூர் பங்களாவை தாக்காமல் நடவடிக்கை எடுத்தனர்.
இரவு முழுவதும் தீயை அணைக்க போராடி வருவதாகவும், தீ விபத்தில் இருந்து பங்களா முழுமையாக பாதுகாக்கப்பட்டதாகவும் சிறுசேரி தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்தார். சமூக விரோதிகளின் சதியால் இந்த தீ விபத்து நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.