Publish Date: Thu, 21 Jun 2018 (11:54 IST)
Updated Date: Thu, 21 Jun 2018 (11:57 IST)
‘ஜெயலலிதா கொள்ளையடித்த பணம்’ என்று பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன் “மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன் வியர்வை, ரத்தம், பணம் ஆகியவற்றை கொடுத்து எங்கள் அனைவரையும் எம்.எல்.ஏ ஆக்கினார். ஆனால், ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏக்களும் பெற்றுக்கொண்டு தற்போது மக்களை ஏமாற்றி வருகின்றனர்” என அவர் பேசினார்.
அதிமுக மேடையில் ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் என அமைச்சர் சீனிவாசன் பேசியது மேடையில் இருந்தவர்கள் மத்தியிலும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு, இந்த விவகாரத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் என பலரும் கையில் எடுத்தனர். அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரனும் பேட்டியளித்தார்.
இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் முதல்வர் பழனிச்சாமி தரப்பு இதுபற்றி ஆலோசனை செய்ததாம். சீனிவாசன் பேசியது தவறு.. பேச தெரியவில்லை எனில் சும்மா இருக்க வேண்டும். இவர்களை பற்றி தெரிந்துதான் அம்மா அவர்களை அடக்கி வைத்திருந்தார். இப்போது வாய்க்கு வந்த படி பேசியிருக்கிறார். திமுக உட்பட பலரும் நம்மை பார்த்து சிரிக்கின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாமும் அதை ஏற்றுக்கொண்டது போல் ஆகிவிடும்’ என பேசினார்களாம்.
எனவே, விரைவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.
webdunia
Publish Date: Thu, 21 Jun 2018 (11:54 IST)
Updated Date: Thu, 21 Jun 2018 (11:57 IST)