Publish Date: Mon, 22 Mar 2021 (15:02 IST)
Updated Date: Mon, 22 Mar 2021 (17:57 IST)
தனியொருவனாக இரட்டை இலை சின்னத்தை தலை முடியில் வெட்டி பிரச்சாரம் செய்யும் அதிமுக உறுப்பினர்.
கோவை 66 ஆவது வார்டு உடையாம் பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் கோபால் (50) . இவர் அதிமுகவின் 35 ஆண்டுகாலமாக தீவிர உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சட்டமன்ற வேட்பாளராக கே. ஆர்.ஜெயராமன் போட்டியிடுகிறார். ஜெயராமனுக்கு ஆதரவாக தனி ஒருவனாக கோபால் தனது தலை முடியை இரட்டை இலை போல் வெட்டி செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
தனது இரு கைகளிலும் அதிமுக சின்னமான இரட்டை இலையும், எம் ஜி ஆர் படமும், புரட்சித்தலைவி என்றும் பச்சை குத்தியுள்ளார். கோபால் பிரச்சாரம் செய்யும் இடங்களில், அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதோடு , கேபிள் டிவியில் பணிபுரிந்து வருவதாகவும், அனைத்து மக்களிடமும் நன்கு அறிமுகமானவர் என்பதால் பிரச்சாரம் செய்வதற்கு எளிதாக இருப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து கோபால் பேசும்போது தலையின் பின்புறம் இரட்டை இலை போன்று முடி வெட்டுவதற்கு மூன்றரை மணி நேரம் ஆனதாகவும், 150 ரூபாய் செலவில் அழகாக வந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் தான் அதிமுகவில் 30 வருடமாக இருந்து வருவதாகவும் , கே .ஆர் .ஜெயராமன் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவதாக கூறினார். கொரொனா காலத்தில் கே. ஆர் .ஜெயராமன் சிங்காநல்லூர் தொகுதி மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கியதோடு பண உதவியும் செய்துள்ளதால் கட்டாயம் அவர் வெற்றி பெற அயராது உழைப்பேன் என்றார்.