இன்று மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையே எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் மும்பை அணி குறித்து ரவிச்சந்திரன் அஷ்வின் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப், ராஜஸ்தான், சென்னை உள்ளிட்ட பல அணிகளுக்காக விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் தனது நினைவுகள் குறித்து பேசிய அவர் 2018ம் ஆண்டில் மும்பை அணியுடன் நடந்த போட்டி குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் “2018ம் ஆண்டு நான் பஞ்சாப் கேப்டனாக இருந்தபோது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில், முதல் 13 ஓவர்களில் சுமாராக விளையாடிய மும்பை அணி 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. நன்றாக ஆட்டம் போய்க் கொண்டிருந்தபோது கரண்ட் கட் ஆனதால் போட்டி 20 நிமிடங்கள் தாமதமானது. அதன்பின்னர் போட்டி தொடங்கியபோது பொல்லார்ட் பொளந்து கட்டி மும்பை அணி ஸ்கோரை 180க்கும் மேல் கொண்டு சென்றார்.
சில அணிகளுக்கு அவ்வப்போது அதிர்ஷ்டம் அடிக்கும், ஆனால் மும்பை அணிக்கு எப்போதுமே அதிர்ஷ்டம் அடிக்கிறது. அது எப்படி என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என பேசியுள்ளார்.
இந்த சீசனிலும் முதலில் சில போட்டிகளில் தோற்று புள்ளிப்பட்டியலில் அடியில் கிடந்த மும்பை அணி, திடீரென அதிரடியாக ஆடத் தொடங்கி வேகமாக முன்னேறி ப்ளே ஆப்க்குள் நுழைந்து எலிமினேட்டரில் வந்து நிற்பது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K