நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது.
இந்நிலையில் இந்த இடைப்பட்ட காலத்தில் வடிவேலு கொடுத்த நேர்காணல்களில் இயக்குனர்கள் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் ஆகியோரை தரக்குறைவாகப் பேசி வந்தார். அதன் பின்னர் வடிவேலு தற்போது படங்களில் நடித்து வருகிறார். மாமன்னன் படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். ஆனால் நகைச்சுவையில் இன்னும் அவரால் கம்பேக் கொடுக்கமுடியவில்லை. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் அவருக்குக் கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வடிவேலு சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனது தொடக்கக் கால சினிமா வாழ்க்கைப் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் சினிமாவில் வந்த புதிதில் ராஜ்கிரண் சார் ஆஃபிஸில்தான் தங்கி இருந்தேன். அவர் படங்களில்தான் நடித்தேன். அதன் பின்னர் ஆர் வி உதயகுமார் சார் படங்களில் நடித்தேன். தேவர் மகன் படம் வந்து எனக்குத் திருப்புமுனையாக அமைவதற்கு முன்னால் வரை ராஜ்கிரண் சார் ஆஃபிஸில்தான் தங்கி இருந்தேன். அவர் ஆஃபிஸ் முகவரி மற்றும் டெலிபோன் நம்பரைதான் சினிமாக் கம்பெனிகளுக்குக் கொடுப்பேன். ராஜ்கிரண் சார்தான் எனக்குக் கடவுள்” எனக் கூறியுள்ளார்.