கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். மிகக் குறுகிய கால படமாக உருவாகி வரும் இந்த படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.
படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். கோயம்புத்தூரில் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது சென்னையில் முக்கியமானக் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். இதுவரை இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப் படாமல் உள்ளது.
இந்த படத்துக்கு வேட்டைக் கருப்பு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவிடம் பேசும்போது அவரிடம் இந்த படத்தின் ரிலீஸ் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரபு “இன்னும் ஒரு வாரத்தில் படத்தின் ஷூட்டிங் முடியவுள்ளது. படம் பண்டிகை நாளில் ரிலீஸாகும். அது தீபாவளிப் பண்டிகையா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் ஒரு பண்டிகை நாளில் ரிலீஸாகும். ஜூன் மத்தியில் அதை அறிவிப்போம்” எனக் கூறியுள்ளார்.