நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இடையிலான உறவு குறித்து ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக ஒரு சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. இந்த நிலைஇயில் மும்பை விமான நிலையத்தில் இருவரும் ஒன்றாக வெளியேறி, ஒரே காரில் புறப்பட்டு சென்றது இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
இருவரும் தங்கள் காதலை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் கருத்துகளும், பொது இடங்களில் ஒன்றாக தோன்றுவதும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. கடந்த ஓராண்டாக, ஒரே மாதிரியான சுற்றுலா பின்னணிகள், விஜய்யின் வீட்டருகே ராஷ்மிகா காணப்பட்டது, மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்ட சில பதிவுகளை ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.
சமீபத்தில், ராஷ்மிகாவின் பதிவில் "எனக்குப் பிடித்தவை அனைத்தும் இந்த படங்களில் உள்ளன... இடம், சேலை கொடுத்த அன்பான பெண், புகைப்படக்காரர்," என்று குறிப்பிட்டதும், அந்த புகைப்படங்களை விஜய் எடுத்தார் என்றும், சேலையை அவரின் தாய் அன்பளிப்பாக கொடுத்தார் என்றும் ரசிகர்கள் யூகித்தனர்.
'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' படங்களுக்குப் பிறகு, ராஷ்மிகா - விஜய் ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு.