கடந்த சில ஆண்டுகளில் தமிழ் வெகுஜன வாசகப்பரப்பில் அதிகளவில் வாசகர்களைக் கவர்ந்த நாவலாக இருப்பது மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல். இந்த நாவலை இயக்குனர் ஷங்கர் திரைப்படமாக இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்த நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுள்ளதைக் கொண்டாடும் விதமாக சென்னையில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி விகடன் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
விழாவில் அவர் பேசும்போது “தமிழ் சினிமாவில் கதை சொல்லலில் மாற்றத்தைக் கொண்டுவந்தவர்கள் மூன்று பேர். பாரதிராஜா, மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியவர்கள். ஷங்கர் படங்களில் பிரம்மாண்டம் மட்டும் இருக்காது. சமூகக்கருத்துகளும் இருக்கும். கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள். சாதி, இன, மதம் என எந்த பாகுபாடும் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.