இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். கிரிக் பார்ட்டி எனும் படத்தில் நடித்த அவர் அதன் பின்னர் அதிகமாக கன்னட படங்களில் நடிக்கவில்லை. அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.
ஆனால் பெரிய நடிகையானதும் ராஷ்மிகா கன்னட படங்களில் நடிப்பதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. இதனால் கர்நாடகாவில் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் பேன் இந்தியா படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் ஹனு ராகவபுடியின் உதவி இயக்குனர் ரவீந்தர புள்ளே இயக்கும் மைசா எனும் பேன் இந்தியா படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகி கவனம் ஈர்த்துள்ளது. சிவப்பு நிற உடையில் ரத்தம் தோய்ந்த முகத்தோடு ராஷ்மிகா ஆக்ரோஷமாக காணப்படும் போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.