தமிழ் சினிமாவில் குரங்கு பொம்மை படம் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் நித்திலன். அதன் பின்னர் விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா படத்தை இயக்கினார். இந்த படம் உலகளவில் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்தது.
இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பல நாடுகளில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்டிங்கில் இருந்தது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட இந்தியப் படங்களின் வரிசையில் முதலிடத்துக்கு சென்றது. நெட்பிளிக்ஸில் இந்த படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து நித்திலனின் அடுத்த படத்தில் நயன்தாரா அல்லது விஜய் சேதுபதி ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நித்திலன் ரஜினிகாந்தை வைத்துத் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நித்திலன் ரஜினிகாந்தை சந்தித்துக் கதையை சொன்னதாகவும் அதைக் கேட்ட ரஜினி அந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஜெயிலர் 2 வுக்குப் பிறகு இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.