தமிழ் சினிமாவில் ஒரு வணிக இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அடைந்திருக்கும் உயரம் அளப்பரியது. தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும் "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார். அவர் தன்னுடைய ஒரு படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களை மற்ற படங்களிலும் இடம்பெறச் செய்து கிராஸ் ஓவர் முயற்சிகளை மேற்கொண்டார். இது ஹாலிவுட் மற்றும் இந்திய படங்களில் முன்பே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்தான் என்றாலும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்பது இப்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய LUC குறித்துப் பேசியுள்ள அவர் “விஜய் சார் இல்லாமல் ஒரு நாளும் LUC முழுமை பெறாது. அவரின் எண்ணங்கள் மற்றும் ஆர்வங்கள் இப்போது எங்கு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மேற்கொண்டு நடிப்பாரா என்பதும் தெரியாது. ஆகவே LCU வில் அவர் இடம்பெறுவாரா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.” எனக் கூறியுள்ளார்.