திரைப்பட நடிகராகவும், சமையற் கலைஞராகவும் அறியப்படுபவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஜாய் கிரிசில்டா என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரங்கராஜுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் ஜாய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தனக்கும் ரங்கராஜுக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் தற்போது தான் கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் ரங்கராஜ் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்துப் பரபரப்புத் திருப்பமாக சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோய் கிரிசில்டா, “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்குத் திருமணம் நடந்தது அதன் பிறகு இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களாக ரங்கராஜ் தன்னுடன் பேசுவதைத் தவிர்த்து வருகிறார். அவர் தன்னுடைய முதல் மனைவியை சட்டப்படி பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். என்னுடைய குழந்தைக்கு அவர் பதில் சொல்லவேண்டும். அவர் என்னோடு வாழவேண்டும்.” எனக் கூறியிருந்தார்.
ஆனால் ஜாயின் குற்றச்சாட்டுக்கு எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனம் காக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். சமீபத்தில் தன்னுடைய வீடியோ ஒன்றை நக்கல் செய்து போட்டிருந்த சின்னத்திரைக் கலைஞர் குரேஷியின் வீடியோவில் நக்கலாக கமெண்ட் செய்திருந்தார் ரங்கராஜ். இந்நிலையில் தற்போது ஜாய் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் “பெண்களை ஏமாற்றும் ஆண்களைக் கடவுள் கண்டிப்பாகத் தண்டிப்பார். தர்மம் வெல்லும்” எனப் பதிவிட்டுள்ளார்.