96 என்ற மென்சோகப் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் அடுத்து கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் அவரின் முந்தைய படம் போல நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த பட ரிலீஸின் போதே அவர் தன்னுடைய அடுத்த படம் 96 படத்தின் இரண்டாம் பாகம் என அறிவித்தார்.
இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோரே நடிப்பார்கள் என்றும் இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் தயாரிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அந்த படம் கிடப்பில் போடப்பட்டு விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிரேம்குமார்.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்கும் என எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் பிரேம்குமார் எழுதியுள்ள திரைக்கதை, தனது இமேஜுக்கு ஒத்துவராது என்று விக்ரம் சில மாற்றங்களை சொன்னதாகவும், ஆனால் அதை பிரேம் ஏற்க மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இருவரின் கருத்து வேறுபாடும் தீராதப் பட்சத்தில் இந்தபடம் கைவிடப்படலாம் என சொல்லப்படுகிறது.