2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், தனது பள்ளிகால தோழியும் பாடகியுமான சைந்தவியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதுசம்மந்தமாக சைந்தவி வெளியிட்ட அறிக்கையில் “தங்களுக்கு கிடைத்த செய்திகளை வைத்துக் கொண்டு பலரும் பலவிதமாக பேசுவது இதயத்தை நோகச் செய்கிறது. எங்கள் விவாகரத்து எந்தவொரு புற காரணத்தாலும் நடக்கவில்லை. எவர் ஒருவரையும் காரணமின்றி அவதூறு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. எங்கள் முன்னேற்றத்துக்காக நாங்கள் சேர்ந்து எடுத்த முடிவு இது. நானும் ஜி வி பிரகாஷும் 24 ஆண்டுகளாக பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள். எங்கள் நட்பு இனிமேலும் தொடரும்” எனக் கூறியிருந்தார். அதே போல இணைந்து கச்சேரிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இவர்களின் விவாகரத்துக்குக் காரணம் ஜி வி பிரகாஷ் நடிகை திவ்யபாரதியைக் காதலிப்பதுதான் என்றொரு தகவல் இப்போது வரை பரவி வருகின்றது. அதன் உண்மைத்தன்மை இதுவரை யாருக்கும் தெரியாது. இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள திவ்யபாரதி “ஜி வி சாரும், சைந்தவி மேமும் ஒன்றாக கான்செர்ட்டில் பங்கேற்கிறார்கள் என்றதும் என்னை விட்டு விடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்போதுதான் என்னை அதிகமாக டார்கெட் செய்கிறார்கள். அதிலும் பெண்கள்தான் அதிகமாக திட்டுகிறார்கள். ஏன் இப்படி பண்றீங்க? அவங்க நல்ல ஜோடி, ஏன் அவங்களை பிரிச்சீங்க? என்று கேட்கிறார்கள். நான் அதற்கெல்லாம் எந்த பதிலும் சொல்வதில்லை. அப்படியே விட்டுவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.