'அயோத்தி' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மந்திரமூர்த்தி, புதிய படத்திற்காக தயாரிப்பாளர் சுதன் நிறுவனத்துடன் இணைந்த நிலையில், தற்போது அவர் எதிர்பாராத சிக்கலை சந்தித்துள்ளார் என கூறப்படுகிறது.
இயக்குநர் மந்திரமூர்த்தி, மதுரை தயாரிப்பாளரின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து விலகி சுதனின் ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் கைகோர்த்தார். இதனால் அதிருப்தியடைந்த மதுரை தயாரிப்பாளர் மந்திரமூர்த்தியை தனது நிறுவனத்தில் வைத்து பட வேலைகளை தொடங்குவதற்காக செலவிட்ட ₹35 லட்சத்தை திருப்பித் தருமாறு நிபந்தனை விதித்துள்ளார்.
மேலும், சுதனிடம், மந்திரமூர்த்தி அடுத்ததாக இயக்கும் மூன்றாவது படத்தை மதுரை தயாரிப்பாளர் நிறுவனத்திற்கே தயாரித்துத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த சூழ்நிலையால், மந்திரமூர்த்தி மற்றும் தயாரிப்பாளர் சுதன் இருவரும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
மந்திரமூர்த்தியின் நிலைப்பாடு மற்றும் மதுரை தயாரிப்பாளர் நிபந்தனைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் எப்படி முடிவுக்கு வரும் எனத் திரையுலகம் உற்று நோக்கி வருகிறது.