தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே மற்றும் நந்தலாலா உள்ளிட்ட பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் நடந்த பாட்டல் ராதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது படத்தைப் பற்றி பேசாமல் வேறு என்னென்னவோ பேசியும் சில இடக்கடக்கரலான வார்த்தைகளை வெளிப்படையாகப் பேசியும் முகம் சுளிக்க வைத்தார். இதனால் அவர் மேல் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து மற்றொரு பட நிகழ்ச்சியில் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் நேற்று இயக்குனர் ராமின் பறந்து போ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மிஷ்கின் பேசும்போது “என்னுடைய டிரெய்ன் மற்றும் பிசாசு2 ஆகிய படங்கள் ரிலீஸானதும் நான் சினிமாவில் இருக்க மாட்டேன் என நண்பர் ஒருவர் தயாரிப்பாளர் தாணு சாரிடம் சொன்னாராம். அந்த நண்பருக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். நான் சினிமாவில் சந்தோஷமாக எல்லாம் இல்லை. அதனால் சீக்கிரமே சினிமாவை விட்டு சென்றுவிடுவேன். எனக்கு ராமின் படங்கள்தான் ஆறுதல்” எனக் கூறியுள்ளார்.