நடிகர் விக்ரம்மின் மகனான துருவ் விக்ரம் அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் படமான ஆதித்யா வர்மா படம் மூலமாக் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான மகான் திரைப்படத்தில் நடித்தார். அதையடுத்து மூன்றாவது படமாக மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் படத்தில் நடித்துள்ளார். ஆனால் பைசன் படம்தான் தன்னுடைய முதல் படம் என்று துருவ் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபது, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
படத்தில் துருவ் விக்ரமின் உழைப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து துருவ்வின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. டாடா படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் துருவ் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.