பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது பைசன் திரைப்படம். இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.
தமிழகத்தின் தென் மாவட்ட அரசியலை கபடி வீரரான மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையோடு இணைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு மூன்று படங்கள் ரிலீஸாக இருந்தாலும் பைசன் படத்துக்குப் பெரியளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் முந்தைய படங்களைப் போல இல்லாமல் பைசன் படத்துக்கு ஏன் ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் மாரி. இது குறித்து “இந்த படத்துக்குக் காளமாடன் என்றுதான் பெயர் வைத்தேன். ஆனால் தமிழ்நாட்டைத் தாண்டியும் இந்த படத்தை எடுத்து செல்ல ஆங்கிலத்தலைப்பை தயாரிப்பாளர்கள் கேட்டதால் பைசன் என்று பெயர் வைத்தேன். அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.