தமிழ் சினிமாவில் நூற்றுக் கணக்கான படங்களுக்கு இசையமைத்து மெல்லிசை மன்னர் என்ற பட்டத்தைப் பெற்றவர் எம் எஸ் விஸ்வநாதன். 1950 களில் இசையமைக்க தொடங்கிய அவர் அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் புகழின் உச்சத்தைத் தொட்டார்.
தமிழ் சினிமாவின் இரு சூப்பர் ஸ்டார்களாக விளங்கிய எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி கணேசன் ஆகிய இருவருக்கும் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார். எம் ஜி ஆர் அரசியலில் இறங்கி ஆட்சியைப் பிடிப்பதற்கு எம் எஸ் வி யின் பாடல்கள் உதவின என்று சொன்னால் அது மிகையாகாது. இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அவர் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
எம் எஸ் வி அவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு ஆகியவற்றால் காலமானார். இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீடிருக்கும் டிமாண்டி சாலைக்கு எம் எஸ் விஸ்வநாதன் சாலை எனப் பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.