போதைப்பொருள் பயன்பாடு விவகாரத்தில் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்த ப்ரதீப் என்ற நபரை போலீஸார் கைது செய்த நிலையில், அவர் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்க்கு போதைப்பொருட்களை விற்றது தெரியவந்தது. அதை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தும் அவரிடம் போதைப்பொருள் பெற்று பயன்படுத்தியது தெரிய வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கழுகு பட ஹீரோ நடிகர் கிருஷ்ணாவும் சிக்கிய நிலையில் தலைமறைவான அவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கிருஷ்ணாவின் வீடு உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் கிருஷ்ணாவிடம் 14 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் பல தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது.
முக்கியமாக போதைப்பொருட்களை ரகசிய வார்த்தையை சொல்லி ஆர்டர் செய்வது, சொந்த செல்போன் எண்ணை பயன்படுத்தாமல் டிரைவரின் செல்போன் மூலம் தொடர்பு கொள்வது போன்ற சம்பவங்கள் தெரிய வந்துள்ளது. இதுதவிர கிருஷ்ணாவுடன் வேறு யாரெல்லாம் போதைப்பொருள் பயன்படுத்தினார்கள் என போலீஸார் எடுத்துள்ள லிஸ்ட்டில் சில முக்கிய திரைப்புள்ளிகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீகாந்தை தொடர்ந்து கிருஷ்ணாவையும் போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து தமிழ் சினிமா நடிகர்கள் போதைப்பொருள் வழக்கில் கைதாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K