தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தியான ஆசிஷ் லதா ராம்கோபின் என்பவர் மோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்க தொழிலதிபர் ஒருவரை ரூ.3.22 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் டர்பன் நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
'அகிம்சைக்கான சர்வதேச மையம்' என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவரான ஆசிஷ் லதா, மகாராஜ் என்ற தென் ஆப்பிரிக்க தொழிலதிபரிடம் ரூ.3.22 கோடி தேவைப்படுவதாக கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து மருத்துவமனைக்கு துணிகள் இறக்குமதி செய்ததாகவும், வரி செலுத்த பணம் தேவைப்படுவதாகவும் கூறி, போலியான ரசீதுகளை காட்டியுள்ளார். காந்தியின் கொள்ளு பேத்தி என்பதால், மகாராஜ் அவரை நம்பி பணத்தை கொடுத்துள்ளார்.
ஆனால், ஆசிஷ் லதா பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை. மேலும், அவர் கொடுத்த ஆவணங்கள் போலியானவை என தெரியவந்ததும், மகாராஜ் மோசடி புகார் அளித்தார்.
வழக்கை விசாரித்த டர்பன் நீதிமன்றம், ஆசிஷ் லதாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. தற்போது அவர் 50,000 ரேண்ட் பிணைத்தொகை செலுத்தி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
மகாத்மா காந்தியின் வாரிசுகள் பலர் மனித உரிமை பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிஷ் லதாவின் தாயார் எலா காந்தி, தென் ஆப்பிரிக்காவில் பிரபலமான சமூக சேவகி ஆவார்.