Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகம் போற்றும் கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள்...

உலகம் போற்றும் கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள்...
, திங்கள், 24 ஜூன் 2019 (16:12 IST)
கலங்காதிரு மனமே கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என தன் முதல் பாடல் வரிகளிலேயே தத்துவத்தை விதைத்துவிட்டு,மூன்றாம் பிறை எனும் படத்தில் தன் கடைசிப் பாடலில் கண்ணே கலைமானே கண்ணின் மணியெனெ என ரசிகர்களின் உள்ளத்தை உருக்கும் வரிகளை நமக்குத் தந்து, நீங்கா புகழுடன் என்றும் நம் மனதில் நிலைத்திருக்கிறார் நம் கவிப்பேரரசர் கண்ணதாசன்.
கண்ணதாசன் ஜூன் 24- 1927 ஆம் ஆண்டு , சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுகூடற்பட்டியில் பிறந்தார். பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், தாய் விசாலாட்சி இந்த தம்பதியினருக்கு எட்டாவது மகனாக பிறந்தார் நம் கவிஞர். கவிஞருக்கு  பெற்றோர் வைத்த இயற்பெயர் முத்தையா. 
 
ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன்.
 
கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.
 
அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.
 
கண்ணதாசனின் திறமையால் ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார் ஒரு பத்திரிக்கை அதிபர். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17. 
 
பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. 
 
கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.
 
பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். இந்த பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். 
 
கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார்  இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர். 
50-களில் தொடங்கி தான் மறையும் வரை, மிகச் சிறந்த பாடல்களை அளித்தவர் கவிஞர் கண்ணதாசன். தத்துவம், காதல், சோகம், சந்தோஷம் என பலதரப்பட்ட விஷயங்களில் எழுதியவர் கண்ணதாசன். ஒருமுறை இயக்குநர் விசு , கே .பாலச்சந்தர் கேட்டுக்கொண்டதற்கினங்க கவிஞரிடம் பாட்டெழுதச் சென்றார். கதைக்கான சூழ்நிலையை இயக்குநர்விசு சொன்னதும் சொன்னதும் கவிஞர் எழுதிக்கோ என்று சொல்லி மடமடவெனக் கூறியதுதன் குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் இடம் பெற்ற  பாடல் வரிகள்:
 
குடும்பம் ஒரு கதம்பம் 
பல வண்ணம் பல வண்ணம் 
தினமும் மதி மயங்கும் 
பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை 
தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை 
காலம் செய்யும் பெரும் லீலை..."
 
இந்தப்  பாடல் வரிகளை கடகடவென்று கூறி விசுவை ஆச்சர்யப்படுத்தினார் கண்ணதாசன் .
 
கண்ணதாசனின் எண்ணற்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார். அதில் ஆன்மீகம்,சமயம் சம்பந்தமாக அர்த்தமுள்ள இந்துமதத்தில் 9 பாகங்கள் , இயேசு காவியம் படைத்துள்ளார்.
 
நாடகங்கள் :
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை, 1956, அருணோதயம், போன்றவற்றை படைத்துள்ளார்.
 
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:
 
அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிபகவத் கீதை போன்றவற்றினைப் படைத்துள்ளார்.

மேலும் இவர்  எழுதிய சேரமான் காதலி என்னும் படைப்பிற்காக சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆன கண்ணதாசன் தன் காலத்தில்  நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், காலத்தால் அழியாத ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்த பெருமைக்குறியவர்.
 
இத்தனை சிறப்புகள் கொண்ட நம் கவிப்பேரரசர் கண்ணதாசன் கடந்த அக்டோபர் 17 1981ஆம் ஆண்டு தனது 54 ஆம் வயதில் இயற்கை எய்தினார். இன்று நாமும் அவரது பிறந்த நாளைக்கொண்டாடுவதில் நாமும் பெருமை அடையலாம் .
 
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை... எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. படைப்பதால் என்பேர் இறைவன் என்று எழுதிய கண்ணதாசன் என்றென்றும் நம்முடன் வாழ்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவர் ஆக்டிங்... அடக்கிவாசி டா சாண்டி!! பிக்பாஸ் ப்ரோமோ இதோ...