Publish Date: Mon, 24 Jun 2019 (11:27 IST)
Updated Date: Mon, 24 Jun 2019 (11:33 IST)
கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாளான இன்று, பா.ஜ.க. கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, கண்ணதாசனின் புத்தகங்களை இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
தற்போதுள்ள தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களின் முன்னோடியாக திகழ்ந்தவர் கவியரசர் என்று அழைக்கப்பட்ட கண்ணதாசன்.
கவியரசர் கண்ணதாசன் பாடலாசிரியர் மட்டுமல்ல, அவர் ஒரு அரசியல்வாதியும் ஆவார்.
1927 ஆண்டு பிறந்த அவர் பல தத்துவ பாடல்களையும், பல ஆன்மிக புத்தகங்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசியலில் வெகு தீவிரமாக ஈடுபட்ட அவர், 1981-ல் காலமானார்.
அவர் எழுதிய புத்தகமான அர்த்தமுள்ள இந்து மதம், இந்து மதத்தின் புகழையும் பெருமையையும் சொல்லக்கூடியவை.
கவிஞர் கண்ணதாசனுடைய 93 ஆவது பிறந்தநாளான இன்று, பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்களை நாம் போற்ற வேண்டும் என்றும், அவரின் தத்துவ நூலான “அர்த்தமுள்ள ஹிந்து மதம்” என்ற புத்தகத்தை இளைஞர்கள் அவசியமாக படிக்க வேண்டும் எனவும் பகிர்ந்துள்ளார்.
எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் எது பகிர்ந்தாலும், அது சர்ச்சைக்குறியதாகவே முடியும். பின்பு மன்னிப்பு கேட்டுகொண்டு ”அதை பகிர்ந்தது நான் இல்லை, அது என்னுடைய அட்மின்” என்று தப்பித்து விடுவார்.
ஆனால் கண்ணதாசனை பற்றிய இந்த டிவிட்டர் பதிவு இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக அமைந்தது. எச்.ராஜா இது போல் தனது டிவிட்டர் பக்கத்தை பயனுள்ளதாக பயன்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.