இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்திய நிலையில், அவர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெண்ணிலா கபடி குழு உள்பட பல திரைப்படங்களை இயக்கிய சுசீந்திரனிடம், ராஜகுமாரன் என்பவர் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 29ஆம் தேதி அலுவலகத்திற்கு வெளியே டீ குடிப்பதற்காக சென்றபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தியதாகவும், காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி சரமாரியாக தாக்கியதாகவும் தெரிகிறது. பின்னர் கொலை மிரட்டல் விடுத்து, இருட்டான பகுதியில் கீழே தள்ளிவிட்டு தப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, சிசிடிவி கேமரா மூலம் காவல்துறையினர் ஆய்வு செய்ததில், ராஜகுமாரனை கடத்திய ஐந்து பேருக்கும் பற்றிய முழு விவரமும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
ராஜகுமாரன், மதுரையில் உள்ள கல்லூரி மாணவி ஒருவரை காதலித்ததாகவும், அந்த பெண்ணை காதலிக்க கூடாது என்று மிரட்டவே ஐந்து பேர் கொண்ட கும்பலாக அவரை கடத்தி தாக்கியதாகவும், விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் மேலும் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நிலையில் அவர்களையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.