தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத். இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும்தான் அவர் இசையமைத்து வருகிறார். தமிழ் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
தற்போது தமிழில் ரஜினிகாந்தின் கூலி, ஜனநாயகன் மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன. படங்களுக்கு இசையமைப்பது போலவே தொடர்ந்து பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். 34 வயதாகும் அனிருத் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சிலராக வலம் வருகிறார்.
அனிருத் உலகம் முழுவதும் அதிகளவில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் வரும் 26 ஆம் தேதி சென்னையில் ஹுக்கும் சென்னை என்ற பெயரில் கச்சேரி நடத்தவிருந்தார். ஆனால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதாலும், அதற்கு நிகழ்ச்சி நடக்கும் இடம் போதுமானதல்ல என்பதாலும் தற்போது இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய இடம் மற்றும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.