தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். கடந்த 15 ஆண்டுகளாக தன்னுடைய பட சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்வதில்லை.ஆனாலும் அவரது படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஓப்பனிங்கும் வசூலும் கிடைக்கின்றன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து தனது அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனையே இயக்க நியமித்துள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் அஜித் தற்போது கார் பந்தயத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார். இதையடுத்து அஜித் 64 படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒப்பந்தமான நடிகர்களின் தேதிகளையும் வாங்கத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.