தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு சென்னைத் திரும்பினார். தற்போது தன்னுடைய கனவான கார் ரேஸ் பந்தயங்களில் மீண்டும் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ள அஜித், வருடத்துக்கு ஒரு படம் என நடிக்கும் முடிவில் உள்ளாராம்.
இப்போது அஜித்தின் அடுத்த படத்துக்கான திரைக்கதை வேலைகளில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை தயாரிக்கப் போகும் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதில் பல நிறுவனங்களின் பெயர்கள் அடிபடும் நிலையில் ரோமியோ பிக்ஸர்ஸ் ராகுல் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் அஜித்தின் துணிவு மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.