மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் (28), தங்க நகை திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இளைஞர் லாக்-அப் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பல்வேறு கூர்மையான கேள்விகளை எழுப்பினர்.
"சிவகங்கை எஸ்.பியை இடமாற்றம் செய்துள்ளீர்களே? அவரை இடைநீக்கம் செய்திருக்க வேண்டாமா?"
"சம்பவம் நடந்த அன்று அஜித்குமாரைத் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால், அங்கிருந்தே விசாரணை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அவரது உடல் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
"நகை காணாமல் போனது தொடர்பாக எப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது?"
"நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை?"
மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்ட போது "அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டது. சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய திருப்புவனம் நீதித்துறை நடுவரை காவல்துறையினர் சூழ்ந்திருந்தனர்.
உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பாக அஜித்தின் உடலை முழுமையாக பார்க்க தாயையும் சகோதரரையும் அனுமதிக்காதது ஏன்?" என சரமாரியாகக் கேள்விகளை எழுப்பிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அஜித்குமார் காவலர்களால் அடித்து கொல்லப்பட்டதை மறைக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.